யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கலட்டி பகுதியில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் இளைஞர் கூட்டம் ஒன்று அவ்வீதி வழியாக தனிமையில் செல்லும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முற்படுவதுடன் , சேட்டைகளை புரிந்து வந்துள்ளனர்.
இளைஞர்களின் அந்த செயலை ஊர்மக்கள் நீண்ட நாட்களாக அவதானித்து வந்த நிலையில் , இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸாரும் விரைந்து நடவடிக்கை எடுக்காத நிலையில் , நேற்று ( ஞாயிற்றுக்கிழமை )மாலை வழமை போன்று அப்பகுதியில் கூடிய இளைஞர் கூட்டம் பெண்களுடன் சேட்டை புரிந்த வேளை , ஊர் மக்கள் ஒன்று கூடி இளைஞர் கூட்டத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அத்தாக்குதலில் நான்கு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..