அக்கரபத்தனை - எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (09) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில் பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார். நிகழ்வொன்றிலும் பங்குபற்றியுள்ளார் என சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலில் இருக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த தோட்டத்தில் சுமார் 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே தனிமைப்படுத்தலை தொடர்வதா அல்லது பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
0 Comments
No Comments Here ..