மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்த இங்கு வந்தவர்கள் யாரும் கதைக்க முடியாது. கிளிநொச்சி விடயத்தை, கிளிநொச்சியில் பிறந்த நாமே கவனிப்போம் என கரைச்சி பிரதேசசபையின் ஐ.தே.க உறுப்பினர் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த தவிசாளர் அ.வேலமாலிகிதன் அதை அங்கீகரித்தார்.
கரைச்சி பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று (14) இடம்பெற்ற போது, இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.
கரைச்சி பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போது, ஆதனவரி பிரேரணை தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி குடியிருப்பாளர்களிற்கு ஆதனவரியை
5 வீதமாக குறைக்கும்படி சமத்துவ கட்சியினர் தொடர்ந்து பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சி அதை கணக்கிலெடுக்காமல் இருந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து, ஆதனவரியை குறைப்பதாக நேற்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. வர்த்தக நிலையங்களிற்கு 8 வீதமாகவும், குடியிருப்பாளர்களிற்கு 6-7 வீதமாகவும் குறைப்பதாக தவிசாளர் அறிவித்தார்.
எனினும், எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தன. 5 வீதமாக குறைக்கும்படி வலியுறுத்தினர்.
சமத்துவ கட்சியின் உறுப்பினர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐ.தே.கவின் உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து வந்தவர்கள் இங்கு கதைக்க முடியாது. கிளிநொச்சியை சேர்ந்த நாமே இங்குள்ள பிரச்சனைகளை பேசுவோம்“ என கூறி, ஐதேகவின் புகழ்பாடிக் கொண்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுயேட்சைக்குழு உறுப்பினர்கள், பிரதேசவாதம் பேசும் உறுப்பினரை கட்டுப்படுத்த கோரினர். எனினும், தவிசாளர் அதை செய்யாமல், அவரை தொடர்ந்து பேச அனுமதித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமத்துவ கட்சியின் 11 உறுப்பினர்கள், சுதந்திரக்கட்சி மற்றும் ஈ.பி.டி.பியின் தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் என 13 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆதன வரி குறைக்கும் பிரேரணையை தவிசாளர் சமர்ப்பித்தார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 17 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி, ஐ.தேகவின் ஒவ்வொரு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர்.வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதியம் 1.30 அளவில் சபைக்கு திரும்பினர்.
0 Comments
No Comments Here ..