நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக தாம் அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்து வந்தார். இதனிடையே கடந்த மாதம் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப் போவதாக அறிவிப்பினை வெளியிட்டார். இதையடுத்து பல எதிர்பார்ப்புடன் ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி பிஎம் சுதாகர், மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரஜினி ரசிகர்கள் மன்றத்திற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் வணக்கம். நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும், மருத்துவர்கள் ஆலோசனையை மீறி அரசியலுக்கு வந்தால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் படியும், தாம் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலை குறித்தும் தாம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்தி, அதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசுவது அவரை மேலும் நோகடிக்கும் செயல். இந்த போராட்டத்திற்கு ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி உண்டியல்களை தூக்கிக்கொண்டு நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மிகவும் கேவலமான செயல், தலைவர் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி ரசிகர் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..