22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறுகிறது,!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (27) காலை வவுனியாவில் இடம்பெறுகிறது. குருமன்காட்டு பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 10 மணிக்கு கூட்டம் இடம்பெறுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் என்றாலே, ஒரு போர்க்களம் என்பது மாதிரித்தான் கடந்த சில கூட்டங்கள் இருந்தன. இன்றைய கூட்டத்தில் அப்படி இருக்காதென தெரிகிறது. எனினும், சின்னச்சின்ன சர்ச்சைகள் வர வாய்ப்புள்ளது.

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம், புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பற்றி ஆராயப்படவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி ஜெனீவா பற்றி இன்று கலந்துரையாடுவதற்கு, 3 நாட்களின் முன்னரே மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையை தாக்கல் செய்து விட்டார்.

 அதேபோல, புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை எழுத்து வடிவிலும், நேரிலும் கூட்டமைப்பு சமர்ப்பித்து விட்டது. உள்ளூராட்சி சபை சர்ச்சைகளும் இன்று ஆராயப்படவுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் 49 பேர். ஆனால் 60 பேருக்கு குறையாமல் கூட்டத்திற்கு செல்வார்கள். திருநெல்வேலி சந்தையை போலவே கிட்டத்தட்ட தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவும் உள்ளது என்ற விமர்சனம் கட்சிக்குள்ளேயே உள்ளது.

மத்தியகுழு கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போதே, இதை கட்சி தலைமைக்கு சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், அதை கட்சி கணக்கெடுக்கவில்லை. இதனால் இன்றைய கூட்டத்தில் சர்ச்சை ஏற்படுமென தெரிகிறது. மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்காத போதே இரா.சாணக்கியன் உள்ளிட்ட சிலர் கடந்த மத்திய செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை முயற்சிகள் என வடக்கில் பல சந்திப்புக்கள் நடந்து வருகின்றன. இந்த சந்திப்புக்களில் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்வது தொடர்பில், கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவரான பொன்.செல்வராசா அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மத்தியகுழுவின் அனுமதியின்றி இந்த கூட்டங்களில் கலந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தையும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு அவர் கோரியிருந்தார். எனினும், அது நிகழ்ச்சி நிரலில் பெயர் குறிப்பிட்டு உள்ளடக்கப்படவில்லை. எனினும், நிகழ்ச்சி நிரலின் இறுதியில், ஏனைய விடயங்கள் என ஒதுக்கப்படும் நேரத்தில் முதல் விடயமாக இது ஆராயப்படும் என கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழில் தமிழ் கட்சிகள் கூடி தமிழ் தேசிய பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் இணையலாமா என்பதை ஆராய, கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவரான சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் எழுதியிருந்தார். இதேவேளை, வவுனியாவில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இணையலாமா என்பதையும் ஆராய்வார்கள்.




இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறுகிறது,!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு