02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

40 நாட்களுக்கு பிறகு இயக்க திட்டம்- தயார் நிலையில் மாநகர பஸ்கள்

டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடந்த மாதம் முதல் வாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்று பாதிப்பு மட்டுமின்றி உயிர் இழப்பும் அதிகரித்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பஸ் போக்குவரத்தையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் நகர பஸ்களை மட்டும் முதலில் இயக்க அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் இருந்து மாவட்டத்திற்கு பஸ் சேவை தொடங்கப்படுவது சற்று தள்ளி வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

வருகிற 21-ந் தேதி (திங்கட்சிழமை) முதல் அனைத்து நகரங்களிலும் நகர பஸ்களை மட்டும் இயக்க அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் மாநகர பஸ்களை இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.


கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவில் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் 50 சதவீத பஸ்களை இயக்கவும், அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் தயாராகி உள்ளது.


மொத்தமுள்ள 3200 பஸ்களில் 250 பஸ்கள் தற்போது கொரோனா முன்களப்பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. இது போக மேலும் 1000 பஸ்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

முதல் ஒரு வாரத்திற்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். அதன் பின்னர் பொதுமக்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும். பஸ் நிறுத்தங்களிலும், பஸ்களிலும் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகளை அனுமதிக்கும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்படும்.

இதற்கான அறிவிப்பு நாளை (சனி) வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாளில் அனைத்து பணிமனையில் உள்ள பஸ்களையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும்.

இது தவிர டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 24 ஆயிரம் ஊழியர்களில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களில் கூடுதலாக முகாம்கள் அமைத்து ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறு கடைகள், தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார், ஆட்டோ, வேன்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பஸ்களை இயக்கினால் மட்டுமே ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும். கூலித் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதனால் முதல்கட்டமாக 40 நாட்களுக்கு பிறகு மாநகர பஸ்களை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தயார் நிலையில் உள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





40 நாட்களுக்கு பிறகு இயக்க திட்டம்- தயார் நிலையில் மாநகர பஸ்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு