29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் தனிமை கட்டாயம்

கடந்த சில நாட்களில் தமிழகம் வந்த 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய மரபியல் மாற்ற அறிகுறி உறுதியாகி உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது. இதுவரை 415 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே 100 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுகிறது.

மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களில் உத்தேசமாக 2 சதவீதம் பேருக்குத்தான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட 12 நாடுகளை தவிர, ஒமைக்ரான் தொற்று இல்லாத நாடுகளில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் மரபியல் மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில்தான் பலருக்கு ஒமைக்ரான் தொற்றும் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களில் தமிழகம் வந்த 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய மரபியல் மாற்ற அறிகுறி உறுதியாகி உள்ளது. அவர்களுடைய மாதிரிகள் பெங்களூர் மற்றும் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் 5 நாட்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேட்டு ஏற்கனவே கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் வரவில்லை.

எனவே நாளை முதல் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துகிறது. அதன் படி ஒமைக்ரான் ஆபத்து குறைவாக உள்ள நாடுகள் உள்பட அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் தங்கள் வீடுகளில் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

8-வது நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.

ஒமைக்ரான் தொற்று குறைவான ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களில் நாளை முதல் 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 5 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து உள்ளார்கள்.

ஒமைக்ரான் நெருக்கடியான இந்த சூழலில் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடி மகிழவேண்டியது அவசியம்தான். இருந்தாலும், ஆபத்து இல்லாமல் கொண்டாட வேண்டியது அதைவிட அவசியம். எனவே பண்டிகை கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்.

வழக்கமாக நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் அமர்க்களமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஒமைக்ரான் அச்சுறுத்தலால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதை அரசு வேண்டுகோளாக வைக்கிறது.

கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். நட்சத்திர ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகளை யாரும் நடத்தக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளி மாநிலங்களுக்கும் யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.  

இதுபோன்ற வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி ஒமைக்ரான் பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் தனிமை கட்டாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு