29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

ஆஷாட நவராத்திரி வராஹி விரத வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள்

ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அன்னை வராஹி விரத வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம். 


வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. 

இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். 


ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வராஹி அம்மன். வராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. 


தஞ்சைப் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள். 


வராஹியை விரதம் இருந்து வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்று ஒரு வரி வரும்.

 

ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம். 


வராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வராஹியை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 


வராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள் பிரமாண்ட புராணம் வராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது தேவி வராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு.

 

இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம். 

1. பஞ்சமி, 

2. தண்டநாதா, 

3. சங்கேதா, 

4. சமயேஸ்வரி, 

5 சமய சங்கேதா, 

6. வராஹி, 

7. போத்ரினி, 

8. சிவா, 

9. வார்த்தாளி, 

10. மகா சேனா, 

11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 

12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள். 


இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை. 


ஸ்ரீவராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. 


இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆஷாட நவராத்திரி காலத்தில்.... விரதம் இருந்து பஞ்சமி திதியில் உக்கிரமான பெண் தெய்வங்களை தரிசிப்பதும், வழிபடுவதும், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும். 


காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் தேவி என்று சாக்த உபாஸகர்கள் போற்றுகின்றனர். இன்று 23.6.2020 பஞ்சமி திதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னைக்குப் பிரியமான பன்னிரு நாமங்களைச் சொல்லி வராஹி தேவியை வழிபடுவோம். 


உக்கிர பெண் தெய்வங்களையும் தரிசித்து வேண்டுவோம். வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று மனமார வேண்டிக்கொள்வோம். 


ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.





ஆஷாட நவராத்திரி வராஹி விரத வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு