26,Apr 2024 (Fri)
  
CH
ஆன்மிகம்

ருத்ராட்சத்தின் மகிமை

ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை.

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்.

ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.

ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.

அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.


ருத்ராட்சம் எவ்வாறு தோன்றியது?


சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.


அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?


ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.


நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.


சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.


இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.


ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.


ஆசாரமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?


குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா?


ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது,

என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா?


அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.


ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள்.


எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).


ருத்ராட்சத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்?


ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர்.


ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.


அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே போதுமானது.


பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தையே படைக்கின்றார்.


ஆகையால் ஐந்து முக ருத்ராட்சங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.


ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.


பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?


பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது.


பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.


பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?


நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்!


எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும்.


மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.


எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?


பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.


அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?


இவற்றைப் போல் ருத்ராட்சத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்சம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.


ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?


இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிய வேண்டும்.


ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்சம் அணிய வேண்டும்.


ருத்ராட்சம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.


இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.


ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.


சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சத்தை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.





ருத்ராட்சத்தின் மகிமை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு