பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் மொஹமட் ருஸ்டி என்ற இளைஞர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் தங்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டது.
எந்தவொரு குற்றத்திற்கும் ஆதாரங்கள் இல்லாத போதிலும், ருஸ்டியை 14 நாட்கள் தடுத்து வைத்து, 'மதரீதியான கடும்போக்காளர்' என சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
அத்துடன், விடுவிக்கப்பட்டவுடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவில் வாராந்தம் முன்னிலையாதல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கைகள் ருஸ்டியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சருக்கான கடிதத்தில் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், குற்றம் தொடர்பான வரைவிலக்கணம், விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கான சாத்தியம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த வேண்டிய அவசியமின்மை, பிணைக்கோரிக்கை நிராகரிப்பு மற்றும் காவல்துறையிடம் வழங்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் சாட்சியாக ஏற்கப்படல் ஆகிய ஐந்து விடயங்களும் இந்த சட்டத்தின் ஒடுக்குமுறை போக்குக்கான முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது
0 Comments
No Comments Here ..