செம்மணிப் புதைகுழிகளில் புதையுண்ட உறவுகளுக்கு நீதி கோரி, 'அணையா தீபம்' என்ற பெயரிலான அறவழிப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை, ஜூன் 23) செம்மணியில் ஆரம்பமானது.
1996ஆம் ஆண்டு செம்மணியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கிருசாந்தியின் உறவினர் ஒருவரால் சுடர் ஏற்றி இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர் தாயகமெங்கும் மனிதப் புதைகுழிகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்காத சூழலில், இப் பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்று நீதி பெற வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதில் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், ஜூன் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு இப் பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதே இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..