கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு, நேற்று (ஜூன் 23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஏ.எம். விஜயரத்னவிடம் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
2010 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய போது, சதொச நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் "ஊழல்" எனப்படும் குற்றத்தைப் புரிந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
குறுக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், மேலதிக வழக்கு விசாரணையை ஜூலை 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஒரு சாட்சியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அழைப்பாணை பிறப்பிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் அன்றைய தினம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..