தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்திய வழக்கில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகளுக்கு ஸ்ரீகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீகாந்த் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார். கேரளாவில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட நடிகர் கிருஷ்ணா, நேற்று (ஜூன் 25, 2025) போலீசார் முன்பு ஆஜரானார். இதைத்தொடர்ந்து, நேற்று முதல் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். உயர் ரக போதைப்பொருள் பயன்படுத்தும் அளவுக்கு தனது உடல் ஒத்துழைக்காது என்றும், இரைப்பை பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசாரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்களிடம் சங்கேத வார்த்தைகளில் (Code word) பேசியதாகக் கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அதற்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதால், இந்த போதைப்பொருள் வழக்கில் மேலும் பல திரை பிரபலங்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..