செம்மணி மனிதப் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் மட்டுமல்லாது, இன அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள், பல்வேறு பகுதிகளிலும் நிரம்பியுள்ளதாகவும், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில், முறையான விசாரணைகளோ, உரிய நீதியையோ இன்றுவரை பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளதாகவும்.
குறைந்தபட்சம் இனப்படுகொலைக்கு நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான், வரலாற்றுப் பெருந்துயரம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக செம்மணி, சிந்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து, சிறு குழந்தை உட்பட ஐவரின் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, மக்கள் முன்னெடுத்த 'அணையா தீபம்' தொடர்ப் போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியை நேரில் பார்வையிட்டமை, தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது.
செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் வடக்கு, கிழக்கு முழுவதும் பரவியுள்ளன.
அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் சந்தித்திருப்பார்கள் என்பது தெரியவரும் எனவும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..