அவசரகாலத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அவசரகாலத்தின் போது, பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
ஒரு உண்மையான பாராளுமன்றம் செயல்பட்டிருந்தால், இந்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது. அதன் விளைவுகளை தமிழகத்தில் இன்றும் காண முடிகிறது.
அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம், உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் உடைக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை தான் நேரில் பார்த்ததாகவும், அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும் ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள தனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
"நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம்" என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் அரசியல் சாசன புத்தகத்தை தங்கள் பாக்கெட்டுகளில் வைத்திருந்தாலும், அவர்களின் இதயத்தின் உணர்வுகள் வேறு மாதிரியாக இருக்கின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும் என்றும், அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
ஜெய்சங்கரின் இந்த கருத்துக்கள், தமிழக மீனவர் பிரச்சனைக்கு வரலாற்று ரீதியான ஒரு புதிய கோணத்தை முன்வைத்துள்ளன.
0 Comments
No Comments Here ..