மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்களை பண்டாரகம பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வாகனங்கள், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானவை என பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்களில் ஒரு மொன்டெரோ வகை ஜீப் மற்றும் ஒரு கேரவன் வகை வேன் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், பண்டாரகம வீதாகம பகுதியில் ஒரு நபருக்கு சொந்தமான சந்தேகத்திற்கிடமான வேன் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட வேனில் பொருத்தப்பட்டுள்ள பதிவு இலக்கம், ஹொரணை மில்லனிய பகுதியில் உள்ள மற்றொரு வாகனத்திற்கு சொந்தமானது எனவும், அது சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் ஒருவரால் பயன்படுத்தப்படும் வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட ஜீப் வாகனத்தில் உள்ள பதிவு இலக்கம், மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி முறைமையில் தரவுகளை மாற்றி, தயாரிக்கப்பட்டது எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத வாகனக் கடத்தல் மற்றும் பதிவு மோசடி சம்பவம் தொடர்பாக பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது
.













0 Comments
No Comments Here ..