வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின் கீழ் சுமார் 350 ஏக்கர் தமிழ் மக்களின் நிலம் பறிபோகும் அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப்பரம்பலை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் ஏற்கனவே கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு "கலாபோகஸ்வேவ" என்ற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் உள்ள திரிவைச்சகுளம் என்ற மற்றொரு கிராமத்தில் 350 ஏக்கர் நிலம் "மகாவலி வலயம்" என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் கோரிக்கை
இந்த விடயத்தில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கவனம் செலுத்தி, தமிழ் மக்களின் நிலங்கள் மகாவலி திட்டம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு புதிய குடியேற்றங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், இனப்பரம்பலையும் பாதுகாப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 Comments
No Comments Here ..