ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தனது அண்மைய இலங்கை விஜயத்தின் போது, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது இலங்கை விஜயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஜேர்மி லோரன்ஸ் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தனது இலங்கை விஜயத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் ஜேர்மி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலை மேற்கோள்காட்டி குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..