காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சற்று முன்னர் அறிவித்தார்.
இன்றைய (ஜூலை 22) நாடாளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
தென்னகோனை விசாரித்த குழு, அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும், அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த விசாரணைக் குழு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. சூரசேன தலைமையில் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவால மற்றும் தேசிய காவல்துறை ஆணையத்தின் (அலுவல் முறை) தலைவர் ஈ.டபிள்யூ.எம். லலித் ஏகநாயக்க ஆகியோரைக் கொண்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ், தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..