லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட கிரேன் திடீரென விழுந்தது. இதனால், ப்ரொடக்ஷனில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் உதவியாளர் சந்திரன் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் பிரேதம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கிரேன் ஆபரேட்டர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.விபத்து நடந்தது எப்படி...?
பொதுவாக சினிமா படப்பிடிப்புகளில் செட் அமைக்கப்படும் போது அங்கு ஒளிக்காக தளத்தில் பிரமாண்ட லைட்கள் அமைக்கப்படும். இந்த லைட்களை தூக்கிப்பிடிக்க industrial crane என்ற கிரேன் உபயோகப்படுத்தப்படும்.
நேற்று நடந்த விபத்தின் போது, கிரேனை இயக்கியவர் அனுபவம் இல்லாத, புதியவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன், சமநிலை தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக கீழே இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.
டன் கணக்கில் எடை கொண்ட கிரேன் விழுந்ததில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கிரேன் விழுந்து பலியானவர்களில் பிரபல கார்டூனிஸ்ட் மதன் மாப்பிள்ளை கிருஷ்ணா வும் ஒருவர். அவர் இயக்குநர் சங்கரிடம் இந்தியன் 2 படத்தில் உதவி இயக்குநராக களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.













0 Comments
No Comments Here ..