மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் பேராசிரியர் க.அன்பழகன் சுமார் 75 ஆண்டுகாலம் எப்படி நட்பாக கைகோர்த்து நடந்தார் என்று திரும்பி பார்ப்போம்.
திருவாரூரில் பிறந்து வளர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் க.அன்பழகன். இவரது இயற்பெயர் ராமையா. தான் படிக்கும் காலத்திலேயே பெரியார் ஈ.வெ.ரா மீதும், அவரது கருத்துகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் எப்போதும் தன்னை சுயமரியாதைக்காரராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஒருமுறை திருவாரூரில் முஸ்லிம் இளைஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதற்கு தலைமை ஏற்றிருந்த அறிஞர் அண்ணா, பல்கலைக்கழக மாணவரான ராமையாவை பேச வைத்தார். அதில் திராவிடம், சுயமரியாதை ஆகியவற்றைப் பற்றி அனல்பறக்கப் பேசினார்.
அண்ணாவை காண வேண்டும் என்று அந்தக் கூட்டத்திற்கு ஆவலுடன் வந்திருந்த கருணாநிதி முதல் முறையாக ராமையாவைச் சந்தித்தார். அவரின் பேச்சைக் கேட்டு வியந்த கருணாநிதி தங்கள் ஊரில் நடக்கும் கூட்டம் ஒன்றில் பேச க.அன்பழகனை அழைத்து விட்டு சென்றார். இப்படி தொடங்கிய நட்பு ஏறத்தாழ 75 ஆண்டுகள் நீடித்தது. தனித்தமிழில் பெயர் சூட்ட விரும்பி தனது பெயரை ’அன்பழகன்’ என்று பின்னர் மாற்றிக் கொண்டார். ஒருகட்டத்தில் பெரியார் - அண்ணா இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அவரிடம் இருந்து பிரிந்து ”திராவிட முன்னேற்றக் கழகத்தை” அண்ணா தொடங்கினார்.
இவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களில் முதன்மையானவர் க.அன்பழகன். திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை அதன் வளர்ச்சியை கண்டிருக்கிறார். அண்ணா மறைவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் கருணாநிதி ஆகியோர் தலைமையில் திமுக இரண்டு அணிகளாக பிரிந்து நின்றது. அப்போது எந்த அணிக்கும் ஆதரவளிக்காமல் க.அன்பழகன் தனித்து நின்றார். ஒருகட்டத்தில் நாவலர் நெடுஞ்செழியனே கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சரியாக இருப்பார் என்று கூறியிருக்கிறார். ஆனால் கட்சியின் நலன் கருதி கருணாநிதியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்.
அதன்பிறகு எந்தவொரு சூழலிலும் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதே இல்லை. கருணாநிதி வயதில் சிறியவராக இருந்தாலும் அவரது தலைமையை ஏற்று செயல்பட்டார். இதுபற்றி சிலர் கேள்வி எழுப்பிய போது, ”அவர் என்னைவிட வயதில் சிறியவர் தான். ஆனால் கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்க முடிகிறது. அதனால் அவரை திமுகவின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று சாதாரணமாக பதில் கூறியிருக்கிறார். அதேசமயம் திமுகவின் பொதுச்செயலாளரும் தன்னைவிட மூத்தவருமான அன்பழகனுக்கு கொடுக்கும் மரியாதையை கருணாநிதி என்றும் விட்டு வைத்ததில்லை.
1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் க.அன்பழகனுக்கு வாய்ப்பளித்த போதே இருவருக்குமான வேற்றுமை எல்லாம் மறைந்து போனதை தெரிந்து கொள்ளலாம். அந்த தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பழகனுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவியை அளித்து கருணாநிதி அழகு பார்த்தார். இதன்மூலம் தமிழகத்தை மருத்துவ வசதிகள் நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு அடித்தளம் இட்டார். 1976ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் திமுகவிற்கு சோதனைக் காலமாக அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக மூன்று முறை தமிழகத்தை ஆட்சி செய்த நிலையில் 1987ல் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். இந்த சூழலில் நாவலர் நெடுஞ்செழியன் அணி மாறினாலும், கருணாநிதிக்கு தோளோடு தோள் நின்றவர் க.அன்பழகன். மத்தியில் இந்திரா காந்தி ஆட்சியின் போது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட சூழலில் கருணாநிதியை கைவிடாமல் க.அன்பழகன் இருந்தார். 1977ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். தொடர்ந்து 9 முறை கழகப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதி.
தன்னைப் பற்றி க.அன்பழகன் எப்போது அறிமுகம் செய்து கொண்டாலும், முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன் என்று தான் சொல்லிக் கொள்வாராம். 1989 மற்றும்1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த போது அன்பழகனுக்கு கல்வித்துறை அமைச்சராக கருணாநிதி பொறுப்புக் கொடுத்தார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
எந்தவொரு சூழலில் க.அன்பழகனுக்கு எள்ளளவும் மதிப்பு குறையாமல் கருணாநிதி பார்த்துக் கொண்டார். அதேசமயம் அவருக்கு உரிய பதவி, சரியான மேடை கொடுத்து திமுகவின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். அன்பழகனின் பெரும்பாலான பிறந்த நாள்களுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டப் பகுதியில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்று கருணாநிதி வாழ்த்துக் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் உடல்நிலை நலிவுற்ற பிறகு நாற்காலியில் மட்டுமே நகர முடியும் என்று நிலைக்கு வந்த போது, அன்பழகன் நேரில் சென்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.
இவ்வாறு இருவரின் நட்பும் ஒப்பில்லா சிறப்புகளை பெற்று விளங்கியது. சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிட கருணாநிதிக்கு பெரும் துணையாக க.அன்பழகன் இருந்திருக்கிறார். தமிழக அரசியலில் என்று நிறைந்திருப்பார் இனமானப் பேராசிரியர்.
0 Comments
No Comments Here ..