தென்னாபிரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் உச்சத்தை எட்டும் நேரத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, குறைந்தது 40,000பேர் உயிரிழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
கேப் டவுன் பல்கலைக்கழகம் மற்றும் சுகாதாரத் துறையின் நிபுணர்களைக் கொண்ட மாடலிங் மற்றும் சிமுலேஷன் ஹப் ஆப்ரிக்கா (மாஷா) என்ற கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விடயம் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாஷா கூட்டமைப்பின் தலைவர் ஷீட்டல் சிலால் இதுகுறித்து கூறுகையில், ‘ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில், இறப்பு எண்ணிக்கை 45,000-48,000 ஆக இருக்கும்.
இங்கே நாங்கள் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு தொற்றுநோயின் முழு அளவிலும் கணிப்புகளை உருவாக்க முயற்சிக்கிறோம், எனவே கணிசமான நிச்சயமற்ற தன்மை உள்ளது’ என கூறினார்.
தென்னாபிரிக்கா தனது முதல் கொரோனா வைரஸ் தொற்றை கடந்த மார்ச் 5ஆம் திகதி உறுதிப்படுத்தியது.
கணிப்பின் படி, எதிர்வரும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை 20,000-35,000 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
57 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 18,003பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 339பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனாதிபதி சிரில் ரமபோசா, கடந்த வாரம் ஜூன் முதல் நாடு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..