டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தி 1,000 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து நடந்தபோது பெரும்பாலான குடிசைவாசிகள் உறக்கத்தில் இருந்திருக்கின்றனர். இருப்பினும் தீ முழுமையாகப் பரவும் முன்பாக அவர்கள் அனைவரும் தங்கள் குடிசைகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இதனால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய தென்கிழக்கு டெல்லி காவல் துணை ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா, ‘துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் நள்ளிரவு ஒரு மணியளவில் எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அனைவரும் அப்பகுதிக்கு விரைந்தோம். இந்த விபத்தில் 1,000 முதல் 1,200 குடிசைகள் எரிந்து நாசமாகியிருக்கலாம். தீ விபத்தின் போது குடிசைவாசிகள் பெரும்பாலானோர் குடிசைகளை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்’ என்றார்.
தீயணைப்புத் துறை அதிகாரி எஸ்.எஸ்.டுலி கூறுகையில், ‘தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் இந்தப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்புப் பணியை மேற்கொண்டோம். ஏறக்குறைய 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம். தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.
நள்ளிரவு ஒரு மணி முதல் தீயணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள், அதிகாலை 3.15 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
0 Comments
No Comments Here ..