இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவம் காரணமாக, அங்கு ஆதிக்கம் செலுத்த, பல நாடுகள் போட்டி போடுகின்றன,'' என, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், பிபின் ராவத், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:சர்வதேச வர்த்தக போக்குவரத்துக்கு, இந்திய - பசிபிக் பிராந்தியமும், குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
இந்திய பெருங்கடலுக்கு, பூகோள ரீதியில் பல வசதிகள் உள்ளன. அதனால், அங்கு ஆதிக்கம் செலுத்தவும், தளங்களை அமைக்கவும், பல நாடுகள் முயற்சிக்கின்றன.
அதில், பொருளாதார செழிப்பு, படை பலம், அதிகரித்து வரும் போட்டி காரணமாக, சீனா, அதிக அக்கறை காட்டி வருகிறது. தற்போது, இந்துமாக்கடல் பிராந்தியத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ், 120க்கும் அதிகமான போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையிலும், இந்திய பெருங்கடல் பிராந்தியம், தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறது. அண்டை நாடுகளின் எதிர்ப்பு, அதிகரிக்கும் போட்டி போன்ற சூழலை மீறி, வல்லரசாக வேண்டும் என்ற இலக்கை இந்தியா எட்டும். இதற்கு நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களும், முப்படைகளின் திறனை மேம்படுத்துவதும் முக்கியம்.
அத்துடன், அமைதியான, ஸ்திரமான பாதுகாப்பு சூழலும் நமக்கு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது, நாட்டின் பாதுகாப்பில் சந்தித்து வரும் சவால்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, எல்லை பாதுகாப்பு மிக முக்கியம். அதற்கு எதிரான சவால்களையும், அச்சுறுத்தல்களையும் ஆராய்ந்து, அதற்கேற்ப நம் படைகளை நவீனமயமாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments
No Comments Here ..