03,May 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

நடத்தை விதிகளை பின்பற்றினால் 3-வது அலையின் தீவிரத்தை குறைக்க முடியும்

கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை சரிவர பின்பற்றி வந்து, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை, பரிசோதனை ஆகியவற்றை கடைபிடித்து வந்தால், எல்லா இடங்களிலும் 3-வது அலை தாக்கம் இருக்காது, எங்கும் தாக்காமல் கூட போகலாம்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீசிக்கொண்டிருக்கிறது. இரட்டை உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக தொற்றுப்பரவல் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. முதல் அலையை விட இந்த 2-வது அலைதான் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. முதல் அலையைத் தொடர்ந்து மக்களிடம் நிலவிய சாதாரண அணுகுமுறைதான் கொரோனா மீண்டும் தலையெடுக்க காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். உருமாறிய கொரோனாவை சுட்டிக்காட்டுகிற ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர்.

முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன், 3-வது அலை தவிர்க்க இயலாதது. புதிய அலைகளுக்கு தயாராக வேண்டியது அவசியம் என்று கடந்த வாரம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

2 நாட்களுக்கு பின்னர் இதுபற்றி அவர் பேசும்போது, “கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை சரிவர பின்பற்றி வந்து, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை, பரிசோதனை ஆகியவற்றை கடைபிடித்து வந்தால், எல்லா இடங்களிலும் 3-வது அலை தாக்கம் இருக்காது, எங்கும் தாக்காமல் கூட போகலாம் ” என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா 3-வது அலைத்தாக்கம், மாநிலங்களில், உள்ளூர் மட்டத்தில், நகரங்களில், மாவட்டங்களில் கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை எந்தளவுக்கு வலுவாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப்பொறுத்துத்தான் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

சில மாதங்களில் இயல்பாகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை இழந்து விட்டாலோ, தடுப்பூசியால் பெற்ற எதிர்ப்புச்சக்தி மங்கத்தொடங்கினாலோ மீண்டும் வைரஸ் தாக்குகிறது, மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் வைரஸ் தாக்கத்தை நிறுத்தும் என்று நிபுணர்கள்கூறுகின்றனர்.

டெல்லி மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன இயக்குனர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியதாவது:-

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய பாதிப்புகள் குறைந்தபோது, வைரஸ் இல்லாததுபோல தொடர்புகொள்ளத்தொடங்கி விட்டனர். நோய் எதிர்ப்புச்சக்தி குறையத்தொடங்கியது. கூட்டம் கூடினார்கள். முகக்கவசம் அணியவில்லை. வைரஸ் மீண்டும் தாக்குவதற்கான வாய்ப்பினை உருவாக்கி தந்தார்கள்.

3-வது அலையை நாம் எதிர்பார்க்கிறபோது, அது எப்போது வரும் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் வரும் மாதங்களில் கொரோனா கால நடத்தைகளைப் பின்பற்றினால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசிபோட முடிந்தால், 3-வது அலை தாக்கம் குறைவானதாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய உயிரி மருத்துவ மரபியல் நிறுவனத்தின் இயக்குனர்டாக்டர் சவுமித்ரா தாஸ் கூறுகையில், எங்கள் கவலை என்னவென்றால், உருமாற்றம் மேலும் பரவுகிறதா, தீவிரமானதாக இருக்கிறதா என்பதுவும், தற்போதுள்ள மருந்துகளையும், தடுப்பூசிகளையும் பயனற்றவை ஆக்குகின்றனவா என்பதுதான். அப்படி இருந்தால் உருமாற்றம், கவலைக்குரிய ஒன்றாகத்தான்வகைப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் அருண் சர்மா, “3 அடுக்கு முகக்கவசம், அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டத்தை தவிர்த்தல், ஆகியவை வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும். தடுப்பூசி மூலம் மக்களை காக்கிறோம். இதுதான் பரவல் சங்கிலியை உடைக்கும்” என்கிறார்.

மேலும், கொரோனா பரவல் அதிரடி வேகத்தில் இருக்கிறது. எல்லா உருமாற்றத்தையும் அடையாளம் காண விஞ்ஞானிகளுக்கு போதிய அவகாசம் இல்லை. எனவே வைரஸ் பரவலை தடுப்பதில், வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.




நடத்தை விதிகளை பின்பற்றினால் 3-வது அலையின் தீவிரத்தை குறைக்க முடியும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு