25,Apr 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

படையாக திரண்டு உழைக்க கமல் வேண்டுகோள்

கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக்கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம் காணும் கரங்களும் நம்முடையவைதான்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னையில் 7 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உலகத் தரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனும் லட்சிய தாகம் நமக்கு உண்டு.

கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக்கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம் காணும் கரங்களும் நம்முடையவைதான்.

மக்கள் நீதி மய்யம்

சிங்கப்பூரில் இருப்பதுபோல் சர்வதேச தரத்திலான நிரந்தரத் தீர்வு; சென்னையின் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது; நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபைகள், ஊழலற்ற நேர்மையான வெளிப் படையான துரித நிர்வாகம் உள்ளிட்ட எண்ணற்ற தனித்துவம்மிக்க செயல்திட்டங்களை நாம் நமது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம்.

இவற்றை நடைமுறைப் படுத்தவும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். `ஊழலிலும் லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நேர்மையும் திறமையும் வாய்ந்த உறுப்பினர்கள் கிடைக்கமாட்டார்களா?!’ எனும் ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது.

பல ஆண்டுகளாகக் கதறியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் தெருவிலும் இருக்கின்றன. தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாகவேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கின்றன.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காகக்கொண்டு ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது கொள்கைகள், செயல் திட்டம், சின்னம் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்க வேண்டும். இவர்களை வெற்றியடையச் செய்யும் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நாம் ஒரு படையாகத் திரண்டு உழைக்க வேண்டும். நடைபெறவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள், ஒரு முன்மாதிரி மாடலாக இந்தியா முழுக்கப் பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது.

அந்தந்தப் பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப்பொழுதும் சோர்வடையாமல் உழையுங்கள். என்னைப் பொறுத்தவரை உயர்ந்த நோக்கம், நேர்மை, திறமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவைதான் ஒரு மனிதனை வெற்றியை நோக்கிச் செலுத்தும் விசைகள்.

அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் களத்தில் வாகை சூட, வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கையில் கூறி உள்ளார்.

இன்றைய பட்டியலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 7 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

விமல்ராஜ் வார்டு-55, சாமுண்டேஷ்வரி வார்டு-61, ஜெனிதா வார்டு-96, பாலாஜி வார்டு-23, நித்யா பிரவீன்குமார் வார்டு-26, சரவணன் வார்டு-29, பிரவீன்குமார் வார்டு-32.

இதே போன்று கோவை, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கும் உடுமலை, கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், குமாரபாளையம், வள்ளி பாளையம், பல்லப்பட்டி நகராட்சி, ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி, ஆலம்பாளையம் பேரூராட்சி பகுதிகளுக்கும் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




படையாக திரண்டு உழைக்க கமல் வேண்டுகோள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு