இஸ்ரேலுடனான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளவோ ஈரானுக்கு தற்போது எந்த உடன்பாடும் இல்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இது வெளிவந்துள்ளது.
அமைச்சர் அராக்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை. இருப்பினும், தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் ஈரானிய மக்களுக்கு எதிரான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேலிய ஆட்சி நிறுத்தினால், அதற்குப் பிறகும் எங்கள் பதிலைத் தொடர நாங்கள் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்-ஈரான் இடையே "முழுமையான போர் நிறுத்தம்" ஏற்பட்டதாக அறிவித்திருந்த கருத்தை ஈரானின் செய்தித் தளங்கள் முற்றிலும் மறுத்துள்ளன. போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முறையான அல்லது முறைசாரா முன்மொழிவு எதனையும் ஈரானிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மணிநேரத்திற்குள் போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் அறிவிப்பு தவறானது என்பதை இஸ்ரேலுக்கு ஒரு "செயல்பாட்டு" பதில் மூலம் ஈரான் காண்பிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா களமிறங்கி ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் முதலில் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்ததுடன், கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியது. டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலை மத்திய கிழக்கில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..