அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறார் சாமியார் ஒருவர். அந்தக் காமெடி சாமியாரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண டிராக்டர் மெக்கானிக்காக இருந்த இளைஞர் தற்போது கருப்பசாமி கார்மேகச் சித்தராக அவதாரம் எடுத்திருக்கிறார். பிரபு என்ற பெயர் கொண்ட இளைஞர் கார்மேகச் சித்தராக அவதாரம் எடுத்ததால், பொதுமக்கள் அவரை தேடிப் படையெடுக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்தான் இப்படியொரு விநோத சம்பவம் நடந்து வருகிறது. ஏற்கெனவே கருப்பசாமி என்ற பெயரில் ஒருவர் அருள் வாக்கு கூறியதால், தனது பெயரை புதுக் கருப்பசாமி என மாற்றிக் கொண்ட மெக்கானிக் பிரபு, தற்போது கார்மேகச் சித்தர் என்ற பெயருடன் கலக்கி வருகிறார். 2017ஆம் ஆண்டு தனது அருள் வாக்கு மையத்தை தொடங்கினார் பிரபு. அது முதல் தினமும் அருள்வாக்கு வழங்குவதை ஒரு வேலையாக வைத்திருக்கிறார். ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குல திலக என்று கூறி மன்னரை வரவேற்பது போல், கார்மேக சித்தரையும் இதுபோன்று கூறி வரவேற்கிறார்கள். அது மட்டுமல்ல, வெற்றிகொடிகட்டு படத்தில் ஒட்டகப்பாலில் தான் டீ குடிப்பேன் என்று அடம்பிடிப்பார் வடிவேலு. இவரு எரும பால்ல டீ குடிக்கமாட்டாராம், ஒட்டகப்பால்ல டீ போட்டாதான் குடிப்பாராம் என்று ஒரு வசனம் வரும். அது போல தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் அமர்ந்தோ அருள்வாக்கு சொல்ல மாட்டார் கார்மேக சித்தர். ஒருவரின் தலை மீது அமர்ந்து அருள்வாக்கு சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
குறி கேட்டு வருபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருகிறேன், லாட்டரியில் பணம் விழ வைக்கிறேன் எனக் கூறி ஆயிரக் கணக்கில் கார்மேகச் சித்தர் பணம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. அரசு வேலை வாங்கித் தந்தால் இவ்வளவு கமிஷன் தர வேண்டும் எனவும் பக்தர்களிடம் பேரம் பேசுகிறார்.
கார்மேகச் சித்தரிடம் அருள் வாக்கு கேட்க வந்த பக்தர் ஒருவர் அவர் கேட்டதால் தனது சொகுசு காரையே கொடுத்துச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. குடிசை வீட்டில் தொடங்கிய அருள் வாக்கு மையம் தற்போது பெரிய கட்டிடமாக உருமாறிய நிலையில், தனக்கு சொந்தமாக பிரம்மாண்டமான வீடு ஒன்றையும் கட்டி வருகிறார் கார்மேகச் சித்தர். அந்த வீடு கட்டும் வேலைகளையும் பக்தர்களே செய்து வருகின்றனர் என்பது தான் குறிப்பிடத்தகுந்த விசயம். அந்த அளவிற்கு பக்தர்களை கார்மேகச் சித்தர் வசியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து விவரம் அறிவதற்காக, கார்மேக சித்தரையே தொடர்பு கொண்டு பேசினோம். அரசு வேலை கிடக்கும் என்றும், தடை செய்யப்பட்ட லாட்டரியில் பணம் பெற்றுத் தருகிறேன் என்றும் கூறி பக்தர்களை வசியப்படுத்துவது குறித்து சாமியார் கார்மேக சித்தர் விளக்கமளித்தார்.
போச்சம்பள்ளியில் சாமியார் கருப்பசாமி சித்தரை தேடி படையெடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனவும், தடை செய்யப்பட்ட லாட்டரியில் பணம் விழ வைக்கிறேன் என்றும் சாமியார் ஒருவர் அரங்கேற்றி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..