சமூக வலைத்தளங்களில் பரவிய அவதூறு செய்திகளுக்கு ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்ற ஒற்றை வரியில் நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்திருப்பது திரைத்துறை வட்டாரங்களில் பரபரப்பாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையுடன் தொடர்புபடுத்தி நடிகர் விஜய் சேதுபதி மதமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் கிறித்துவ மதமாற்றத்தை ஜேப்பியாரின் மகள் ரெஜினா நடத்தி வருவதாகவும், அதில் நடிகர்களை அவர் ஈடுபடுத்தியுள்ளதாகவும், இந்த மதமாற்ற நடவடிக்கையின் ஒரு அங்கமாக நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டவர்கள் வடபழனியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் வாட்ஸ் அப், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.
மேலும் அத்தகவலில் மேற்கண்ட நடிகர்களுக்கு சினிமா துறை பிரபலங்களை மதமாற்றம் செய்யும் பணி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்திற்கான மொத்த பட்ஜெட்டும் ரெஜினாவே மறைமுகமாக அளித்ததாகவும். இப்படத்தின் வருவாய் (கருப்பு பணம்) நடிகர் விஜய் மற்றும் ஃபைனான்சியர் அன்புச் செழியனுக்கு சென்று பின்னர் ரெஜினாவுக்கு வந்து சேர்ந்ததை ஐடி வட்டாரங்கள் அறிந்து வைத்திருந்ததாகவும் இதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் மேற்கண்ட தகவலில் கூறப்பட்டிருந்தது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி இன்று காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..