சீனாவில் இயங்கி வரும் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே அங்குள்ள தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஹொங் கொங் மற்றும் தாய்லாந்தில் உள்ள அலுவலகமும் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் மீள அறிவிக்கப்படும் வரையில் தமது வீடுகளில் இருந்தே கடமைகளை மேற்கொள்ளுமாறும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் மாத்திரம் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு உலகின் அனைத்து நாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிகழ்ச்சித் திட்டப் பிரிவால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனாவுடன் இணைந்து சர்வதேச நாடுகளின் நிபுணர்களும் செயலாற்றுவார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் சீனாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கடந்த காலத்தில் ஏற்பட்ட இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுங்க முன்வர வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நகர்களை தனிமைப்படுத்துவதால் பயனில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..