வடக்கு ஆப்கானிஸ்தானில் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு விளையாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டிலிருந்து தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின், குற்றவாளிகளுக்கு சாட்டையடி, கல்லெறிதல் மற்றும் தூக்கு போன்ற கடுமையான தண்டனைகள் பொதுவெளியில் அரங்கேற்றப்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது.
கடந்த 5 நாள்களில் 3 வது முறையாக பொதுவெளியில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஷீபிர்கான் நகரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கையாக, மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தாலிபான்களின் தலைவர் ஹிபாதுல்லா அகுந்ஸடா மற்றும் ஆப்கானிஸ்தான் நீதிமன்றங்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே, குற்றவாளி பொதுமக்கள் மத்தியில் மரன தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக அந்நாட்டின் உச்சநீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தாலிபான்களுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..