சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' என அழைக்கப்பட்ட இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத், 20 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீசின் கொள்ளுப் பேரனான இளவரசர் அல் வாலீத், கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கார் விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு 15 வயதுதான். இந்த விபத்தில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். அன்று முதல், ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் பராமரிக்கப்பட்டு வந்தார்.
கோமா நிலையில் இருந்து மீண்டுவர வாய்ப்பு குறைவு என்பதால், வென்டிலேட்டரை அகற்றும்படி அரச குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கோரினர். எனினும், அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத், தனது மகனுக்கு சுயநினைவு வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை.
இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி, சவுதி அரச குடும்பத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..