காடுகள் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. ஆனால் மனிதர்களின் தேவை பெருகவே காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டன. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில், பெரு, வெனிசுலா நாடுகளில் அதிக அளவில் அமேசான் மழைக்காடுகள் காணப்படுகின்றன. அதிக அளவில் ஆக்சிஜனையும் மழைப்பொழிவையும் தரும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அரியவகை வன உயிரினங்கள், மரங்கள் ஆகியவை அழிந்தன.
அமேசான் மழைக்காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் போல்சனரோ தலைமையிலான அரசு, காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும், காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் அழிவு 2019 உடன் ஒப்பிடும் போது 2020 ஜனவரியில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன
பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.என்.பி.இ-யின் முதன்மை புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாதம் 280 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான மழைக்காடுகள் அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிறுவனம் மாதத்தின் முதல் 30 நாட்களுக்கு மட்டுமான தரவுகளை வெளியிட்டது.
‘கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 1,000 சதுர கிலோமீட்டருக்கு மேல் காடுகள் அழிக்கப்பட்டன. இது மழைக்காலம் தொடங்கியதன் காரணமாகும், இதில் காடுகளின் தளம் மண்ணாக மாறும், இதனால் சில இடங்களில் மண்ணைக் கொண்டு செல்வது கடினம்.
ஆனால் முந்தைய ஆண்டுகளைப் போலவே குறைந்த மட்டத்திற்கு வருவதற்குப் பதிலாக, காடுகள் அழிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது, ஏனெனில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்கள் மற்றும் நில ஊக வணிகர்கள் இன்னும் தீவிரமாக செயல்படுகிறார்கள். இதனால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது’, என சுற்றுச்சூழல் நிறுவனமான இபாமா தெரிவித்துள்ளது.
.
0 Comments
No Comments Here ..