அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வந்தது.
ஈரான் தளபதி அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்தது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் பல்வேறு சச்சரவுகள் இருந்தபோதிலும் அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் போக்குகள் குறைந்தன.
இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்க மற்றும் சவூதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் சவூதி வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து நேற்று விவாதித்தனர். அதே நேரத்தில் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர்’ என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஆர்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..