சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80 க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
சீனாவை அடுத்த படியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் கொரோனா கோரத்தாண்டம் ஆடுகிறது. அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 ஆயிரத்து 172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசர தேவையன்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதை அடுத்து பாதுகாப்பு பணிக்காக இத்தாலி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..