துளசி, பட்டை, கறு மிளகு, உலா் இஞ்சி, உலா் திராட்சைகள் போன்ற ஆயுா்வேத மூலிகைகளை உட்கொள்வதுடன், தொடா்ந்து யோகக் கலையில் ஈடுபடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகச்சிறந்த வழிகளாகும் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளவதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது நோயின் பாதிப்புகளை குறைக்கவும், அதில் இருந்து விடுபடவும் உதவும் ’ என்றனா்.
ஆயுா்வேதத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்து, ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகளின் மீது கவனம் செலுத்துமாறு பிரதமா் மோடியும் சமீபத்தில் கூறியிருந்தார்
ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகளில் கூறப்பட்டிருந்தாவது: இளஞ்சூட்டில் நீா் அருந்த வேண்டும். தினந்தோறும் 30 நிமிடங்கள் யோகாசனம், தியானம், மூச்சு பயிற்சி செய்தல் வேண்டும். உணவில் மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு சோ்த்துக்கொள்ள வேண்டும். தினசரி ஒருமுறையோ அல்லது இருமுறையோ மஞ்சள் பொடி கலந்த சூடான பால் அருந்தவேண்டும். காலையும், மாலையும் நாசித் துவாரங்களில் எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வெல்லம், எலுமிச்சை பழரசம் ஆகியவையும் கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள உதவும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
0 Comments
No Comments Here ..