இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஃபிஜி தீவில் இந்திய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் தலைநகர் சுவாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா சுனாமி வரவிருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறையும் மக்களை எச்சரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்திய வகை கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் இல்லாமல் தப்பி வந்த நாடு ஃபிஜி.
கடந்த மாதம் சிலருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 6 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடி நகரில் இந்திய வகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ஜேம்ஸ் பாங் கூறுகையில், ஃபிஜி தீவில் இந்திய கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். ஃபிஜி தீவில் கொரோனா சுனாமி ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. அதைத் தவிர்த்தாக வேண்டும். இல்லாவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். விரைவில் இதை கட்டுப்படுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் எந்த அளவுக்கு திணறிக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அந்த நிலை இங்கு ஏற்படாமல் பார்க்க வேண்டும் என்றார் அவர். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஃபிஜி தீவில் வசிக்கின்றனர். இங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நோய் பாதிப்பு பெருமளவில் இல்லை. மொத்தமே 109 கேஸ்கள்தான் இங்கு இதுவரை பதிவாகியுள்ளன. 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
தற்போது 42 ஆக்டிவ் கேஸ்கள்தான் உள்ளன. இவர்களில் 18 பேர் வெளிநாடுகளிலிருந்து உள்ளே வந்தவர்கள். 24 பேர் இவர்கள் மூலம் உள்ளே பரவி பாதிக்கப்பட்டவர்கள்.
இதற்கிடையே, வெளிநாட்டுப் பணிகளுக்குச் சென்று விட்டு தீவுக்குத் திரும்பும் படை வீரர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் சிலர் அதை ஏமாற்றி விட்டு குடும்பத்தினருடன் இணைந்து புழங்குகின்றனராம். இதனால் இவர்கள் மூலம் பெருமளவில் வைரஸ் பரவல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. தற்போது ஃபிஜி தீவின் தலைநகர் சுவா, நாடி, லாடோகா ஆகிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுவாவுக்கு அடுத்து பெரிய நகர் லாடோகா ஆகும்.
0 Comments
No Comments Here ..