சீனாவில் வசிக்கும் இந்தியர்கள், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 2,800 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகம் முழுதும் பரவி வருகிறது.
இந்தியாவில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 7 விமான நிலையங்களில் சுமார் 29,700 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
சந்தேகத்துக்குரிய 7 பயணிகளின் மாதிரிகள் மட்டும் புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்- என்.ஐ.வி. (ICMR-NIV) ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சீனாவில் வசிக்கும் இந்தியர்கள், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவில் தங்கியிருந்த காலத்தில், அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். தங்களின் நிலை குறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.
சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும்போது, விமானத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் விமான சிப்பந்திகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பயணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வுகான் நகரிலிருந்து நேபாளத்துக்கு வந்த அமெரிக்க பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சீனாவிலிருந்து திரும்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மாணவி தற்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
0 Comments
No Comments Here ..