தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வருகை தந்த இளைஞர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வந்த இந்த இளைஞர்கள் குழு நேற்று வீடு திரும்புவதற்காக லங்கம பஸ்ஸில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இதன்போது, மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று லங்கம பஸ்ஸை முந்தி செல்ல முயற்சித்துள்ளது.
இதனிடையே குடா மஸ்கெலியா பகுதியில் லங்கம பஸ் மீது தனியார் பஸ் நடத்துனர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் லங்கம பஸ்சின் பின் கண்ணாடி உடைந்தது. குறித்த தாக்குதலில், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் குழுவில் ஒரு இளைஞனும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், லங்கம பேருந்தில் இருந்து இறங்கிய குறித்த இளைஞர்கள் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் குழு, தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..