உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 116 பேர் காயம் அடைந்துள்ளனர். ரஷியா தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 மாடிக் கட்டிடம் மற்றும் 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதமடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் கீவ் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் மூன்று வருடங்களைத் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன.
கீவ் நகரைத் தவிர்த்து, தெற்குத் துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவ் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..