மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பாங்குயில் உள்ள பார்தெலமி பொகாண்டா உயர்நிலைப் பாடசாலையில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்தில், மின்மாற்றி வெடித்ததையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலும், தீவிபத்தும் 29 மாணவர்களின் உயிரைக் குடித்துள்ளதுடன், 280-க்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்துள்ளது. வருடாந்த பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பாடசாலைக்கு அருகில் மின்மாற்றி வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட இந்தக் கோர நிகழ்வு, நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்தெலமி பொகாண்டா உயர்நிலைப் பாடசாலையில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது அங்கு ஆண்டு இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த வேளையில், பாடசாலைக்கு அருகே சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த மின்மாற்றி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
குண்டு வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டதும், பயத்தில் மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மின்மாற்றி வெடித்ததால் ஏற்பட்ட தீ, பாடசாலைக் கட்டிடத்திற்கும் வேகமாக பரவியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தக் கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
0 Comments
No Comments Here ..