காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக "அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக" அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான அல்பானீஸ், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை வெளிப்படையாக ஒரு இனப்படுகொலை என்று கூறி, அதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அண்மையில் அவர் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில், காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார். இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள், அதன் மூலம் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது வழக்குத் தொடுத்து குற்றவியல் விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதனால், அல்பானீஸை மவுனமாக்க அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார். இந்தத் தடையின் மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. மேலும், அவர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை குறித்த செய்தி வெளியான பிறகு, "எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு" என்று அல்பானீஸ் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..