சர்வதேச விண்வெளி நிலையத்தில் 17 நாட்கள் ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்த இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, திங்கட்கிழமை (ஜூலை 14) பூமிக்குத் திரும்ப தனது சக விண்வெளி வீரர்களுடன் புறப்பட்டார். அவரது விண்கலம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அமெரிக்காவின் கலிபோர்னியா பசிபிக் கடலில் தரையிறங்குகிறது.
அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ், நாசா, இஸ்ரோ, மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை இணைந்து, கடந்த ஜூன் 25 அன்று பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில், இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன், அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் பயணித்தனர். 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.
விண்வெளியில் இருந்தபோது, ஷுபன்ஷு சுக்லா பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். ஜூன் 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார். மேலும், ஜூலை 3, 4, மற்றும் 8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், பெங்களூரு, மற்றும் லக்னோவைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஜூலை 6 அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
ஷுபன்ஷு சுக்லா, 17 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து சுமார் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் முக்கியமாக, நெல், காராமணி, எள், கத்தரி, தக்காளி உள்ளிட்ட 6 வகைகளைச் சேர்ந்த 4,000 விதைகளை விண்வெளிக்கு எடுத்துச் சென்று சிறப்புப் பெட்டிகளில் முளைக்கச் செய்தார். இந்த ஆய்வில் இஸ்ரோ, கேரள வேளாண் பல்கலைக்கழகம், மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை முக்கிய பங்கு வகித்தன.
மேலும், வெறும் கண்ணால் பார்க்க முடியாத 'பாசி பன்றிக்குட்டி' என்ற நுண்ணுயிரியை விண்வெளிக்கு எடுத்துச் சென்று, அது எவ்வாறு வளர்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்தார். நீல பச்சை பாசி வகையைச் சேர்ந்த இரு பாசிகள் மற்றும் மைக்ரோஅல்கா என்ற பாசி வகையையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்று அவற்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தார். மைக்ரோஅல்கா பாசி மூலம் எதிர்காலத்தில் உணவு, எரிபொருள், மற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களும் ஜூலை 14 அன்று மாலை 4:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 23 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, டிராகன் விண்கலம் ஜூலை 15 அன்று மாலை 3 மணி அளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பசிபிக் கடலில் தரையிறங்கும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசாவின் மீட்புக் குழுவினர், நான்கு விண்வெளி வீரர்களையும் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கத் தயார் நிலையில் உள்ளனர். இஸ்ரோ வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்படி, விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது உராய்வு காரணமாக சுமார் 1,900 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படும். இந்த அபாயக் கட்டத்தைத் தாண்டிய பிறகு, சுமார் 5.5 கிலோமீட்டர் உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு கடலில் பாதுகாப்பாக விண்கலம் தரையிறக்கப்படும்.
விண்கலம் தரையிறங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு, கிரேன் மூலம் கப்பல் தளத்துக்கு விண்கலம் தூக்கப்பட்டு, நான்கு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள். பூமிக்குத் திரும்பிய பிறகு, நான்கு வீரர்களும் சுமார் இரண்டு வாரங்கள் பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த நடைமுறைகளுக்குப் பிறகே ஷுபன்ஷு சுக்லா இந்தியா திரும்புவார்.
0 Comments
No Comments Here ..