சீனாவுக்கு வெளியே, கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமை, ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என, WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் சூழலில், அவருடைய இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, ஈரானில் பாதிக்கப்பட்டோர் என அந்த நாட்டு அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதென பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் மற்றும் அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள பிரதான மூன்று இடங்களில் ஒன்றாக ஈரான் மாறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது நாட்டில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உண்மையான பாதிப்பு விபரங்களை ஈரான் மறைக்கின்றதென தாம் கருதுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தக் கருத்தை நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தும்படி அனைத்து நாடுகளையும் அவர் கோரியுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
0 Comments
No Comments Here ..