குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று அலரி மாளிகையில் இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சுகநலன் விசாரித்துக் கொண்டார்.
அத்துடன் அவர் விரைவில் குணமடைய வேண்டியும் பிரார்த்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் தந்தை அப்துல் சதாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர், நஷீடின் நலன் குறித்து விசாரித்ததுடன் அவர் குணமடைவதற்காக ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார்.
கடந்த 6 ஆம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார்.
குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர், ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாலைத்தீவின் ஜனாதிபதியாக (2008-2012) சேவையாற்றியவர் மொஹமட் நஷீட் ஆகும். அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவராவார்.
0 Comments
No Comments Here ..