முல்லைத்தீவு மாவட்டத்தின் உப்புமாவெளி பகுதியில் பாரிய சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உப்புமாவெளி பிரதேசத்தில் உள்ள ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள பாரிய மணல் குவியல் தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று முன்தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான், மணல் அகழ்வுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, உப்புமா வெளி பகுதியில் மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேற்றைய தினம் கனியவளத் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிசார் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த மணல் அகழ்வுக்கான அனுமதி பெறப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரிவித்த அதிகாரிகள், யாழ்ப்பாணம் சென்று, இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்தில் சட்டவிரோதமான முறையிலேயே மண்ணகழ்வு இடம்பெற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..