வடக்கு மாகாணத்தில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியருக்கு மருத்துவ மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான “தாய்மை” கருவளச்சிகிச்சை நிலையத்தை அமைத்துள்ளதாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வைத்தியசாலையில் நடத்தப்பட்டது. அதில் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு,
பொதுவாக மணமுடித்த தம்பதியினரது மிகப்பெரிய கனவாக இருப்பது ஒரு குழந்தை செல்வத்தையாவது பெற்று எடுப்பது என்பதே ஆகும்.
இருப்பினும் சில தம்பதியினரால் மருத்துவ, ஆரோக்கிய காரணிகளான பெண்களிடையே பொதுவாக நிலவும் சூழிடலில் காணப்படும் குறைபாடு, கருத்தரித்தல், அல்லது தரித்த கருவை குறித்த காலப்பகுதி வரை பேணுதல் மற்றும் ஆண்களிடையே காணப்படும் விந்து உற்பத்தி குறைவு போன்றவற்றால் இச்செல்வத்தை அடையமுடியாது உள்ளது.
மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது பல மருத்துவ காரணிகளினால் தம்பதிகளில் பெண்ணோ அல்லது ஆணோ அல்லது இருவருமோ பாதிப்புக்குள்ளாகின்றனர்.
போர்க் காலத்தில் நிலவிய அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் போன்றவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதன் விளைவாக கூட அவர்களின் சிக்கலான நிலமை மோசமடைய காரணமாக அமைந்திருக்கலாம்.
வடமாகாணத்தில் மேற்குறிப்பிட்ட மருத்துவப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு முழுமையான சிகிச்சைகள் மற்றும் கவனிப்பு வசதிகள் காணப்படாத நிலையில், கொழும்பு பகுதியிலுள்ள சில வைத்தியசாலைகளில் அவை காணப்படுகின்றன.
வடபகுதியில் உள்ள சாதராண வருமாமனம் உடைய ஒரு குடும்பத்தவருக்கு தேவையான சிகிச்சை பெறுவதற்கும், கொழும்பில் தங்குவதற்கும் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கும் மொத்தமாக செலவழிக்கும் தொகை அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது.
ஆனால் அநேகமான பாதிக்கப்பட்ட தம்பதியினர் மருத்துவ உதவிக்காக அணுக வெட்கப்படும் நிலை காணப்படுகிறது. ஆகையால் தங்களுடைய நெருங்கிய சமூகத்தினால் தாங்கள் ஒரு நகைப்புரியவர்கள் என நினைப்பதை தவிர்ப்பதற்காக சிகிச்சை காலத்தில் இரகசியத்தன்மை பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக அவர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்களைவிட்டு சில கிழமைகள் செலவழிக்க நேரிடும். மேற்குறிப்பிட்டவற்றை பிரச்சினைகளிற்கு ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வாக, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நன்கு வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் தாய்மை செயற்திட்ட மையத்தை வடிவமைக்க முன்மொழியப்படுகின்றது.
தாய்மை திட்ட நிலையம்
இந்த நிலையம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் 1ஆம் மாடியில் நோயாளிகளின் இரகசியதன்மை கருதி அமையவுள்ளது.
இத்திட்டத்திற்கான மூலதனம் 24 மில்லியன் ரூபாயாகும். இதில் அடித்தள உட்கட்டமைப்பு 1.4 மில்லியன் ரூபாயும் சத்திரசிகிச்சை கூடத்திற்கான மருத்துவ உபகரணங்கள் 21 மில்லியன் ரூபாயும் சத்திரசிகிச்சையின் பின்னர் தங்கும் அறைக்கு 1.3 மில்லியன் ரூபாயும் அடங்கும். ஒரு வருடத்திற்கு 20 நோயளிகளுக்கு பாவித்து முடிக்கக்கூடிய பொருட்களுக்கானதும் (செயற்பாட்டு செலவீனம்) மற்றும் வளர்ப்பு ஊடகம், ஏனையவற்றுக்கான செலவீனம் 1.5 மில்லியன் ரூபாயாகும். மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் தேவையான நிதி 25.5 மில்லியன் ரூபாயாகும்.
0 Comments
No Comments Here ..