ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த உயிரிழப்பும் உடல் உபாதைகளும் ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதன்போது, மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே (27) உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, 50 வயதுடைய வயோதிபப் பெண், 19 வயதுடைய இளைஞர் மற்றும் மூன்றரை வயதுடைய ஆண்பிள்ளை ஆகிய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் வயோதிப பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாங்காடு பகுதியில் உள்ள கடற்கரைக்குச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், அங்கு மீனவர்கள் வலையில் சிக்கியிருந்த மீன்களை எடுத்துள்ளனர்.
அப்போது, இந்த மீன் வகை சமைப்பதற்கு உகந்தது அல்ல; அதனால் எடுக்க வேண்டாம் என மீனவர்கள் தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல், மீன்களை அவர்கள் எடுத்துச் சென்றிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்னர், குடும்பத்தினர் மதிய உணவை உட்கொண்டதன் பிறகு, மயக்கமுற்ற நிலையிலேயே களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கடல் மீனினமான பேத்தை என்ற மீனை சமைத்து உண்டமையே உயிரிழப்புக்கும் உடல் உபாதைகளுக்கும் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய 3 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நான்கு பேரும் சாப்பிட்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பகுதி பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
0 Comments
No Comments Here ..