பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து தீயை அணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பிரவேசித்து வீட்டிற்கு தீ வைத்து சென்றமை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..