21,May 2024 (Tue)
  
CH
SRILANKANEWS

மே தினத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் பெயரிடப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் நாளை கொண்டாப்படுகிறது.

இதை முன்னிட்டு, நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல மே தின கொண்டாட்டங்கள் மற்றும் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளன. நாளைய தினம் சர்வதேச தொழிலாளர் தினத்திற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படும் மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் எண்ணிக்கை 40 ஆகும். அவற்றில் 14 கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல சிவில் அமைப்புகள் கொழும்பில் தமது மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்ளவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தாத நிலையில், அதன் மே தின கூட்டம் பி.டி. சிறிசேன மைதானத்திற்கு எதிரே புதிய பிரதீபா மாவத்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தாத நிலையில், பொரளை கெம்பல் மைதானத்தில் தனது கட்சியின் மே தின கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகள் ஊடாக மே தின பேரணியை நடத்தவுள்ளதுடன், கீழ் சத்தம் வீதி பகுதியில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி இவ்வருடம் லிப்டன் சுற்றுவட்டத்தில் தனது மே தின கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஹெவ்லொக் வீதியில் இருந்து ஆரம்பிக்கும் கட்சியின் பேரணி தும்முல்லையை கடந்து கன்னங்கர மாவத்தை ஊடாக குறித்த இடத்தை சென்றடையவுள்ளது.

கொழும்பில் மே தினக் கொண்டாட்டங்களுடன் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மே தினக் கொண்டாட்டங்களை கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் கம்பஹாவில் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பை சுற்றி நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் 6,000 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவசர நிலை ஏற்பட்டால் இராணுவத்தினரை களமிறக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.




மே தினத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு